Blogger Widgets

குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்! - மனதைத் திற 2!

  நீங்கள், நான் ஏன் எல்லோருமே குழந்தையாய் இருந்து வளரும்போது ஒவ்வொரு செயலும், செய்கையும் நமது பெற்றோர், சகோதரர் அல்லது அருகிலிருக்கும் வேறு யாரேனும் - இவர்களைப் பார்த்தே உங்கள் நடை, உடை பாவனைகள் வந்திருக்கும்! உதாரணமாய் உங்கள் தந்தை நல்ல நகைச்சுவையாளர் என்றால் உங்களுக்கும் அந்த நகைச்சுவைப் பழக்கம் தானாகவே தொற்றிக்கொள்ளும்! இப்படியாக வளர வளர மொழி, உடை உடுத்துதல்,  உண்ணுதல் என ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் வளரும் சூழலே தீர்மானிக்கிறது.

  அதுபோலவே நம் பிள்ளைகளுக்கும்! நீங்கள் அடிக்கடி கெட்டவார்த்தை உபயோகிப்பவறென்றால் உங்கள் குழந்தையும் சரளமாக அதை உபயோகிக்கும்! ஒருவேளை நீங்கள் புகைபிடிப்பவர் எனில் குழந்தை வளர்ந்ததும் புகை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உங்கள் குழந்தை நல்லவராவதும், தீயவராவதும் உங்களின் வளர்ப்பு முறையிலேயே உள்ளது.



  இவற்றைப்போலவே இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் முக்கிய தவறு படிப்பைத் திணிப்பது! இளமைக்காலங்களில் நம்மால் படிக்க முடியாமல் போனதை எல்லாம் நம் குழந்தை படிக்க வேண்டும் என்ற எண்ணம்.

  உதாரணமாக டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உடைந்து போனதால் உண்டாகும் தாழ்வுணர்ச்சிக்கு வடிகாலாய் பிள்ளைகள் டாக்டராக வேண்டுமென்று நினைக்கிறோம்! மாறாக குழந்தைகளின் எண்ணங்களையோ அல்லது அவர்களின் விருப்பங்களையோ பொருட்படுத்துவதில்லை. என் பிள்ளை நான் படிக்கவைக்கிறேன் நான் செலவு செய்கிறேன் அது நான் சொல்வதைத்தான் படிக்க வேண்டும் என்று ஆசைகளை நிறைவேற்றும் எந்திரமாகவே பார்க்கிறோம்! குழந்தைகள் நம் சந்ததியின் வழித்தோன்றலே தவிர நம் எண்ணங்களை நிறைவேற்றும் எந்திரம் அல்ல.


பிரபலமான ஒரு ஜென் கதை: 

  பழங்காலத்தில் மூத்த பேராசிரியர் ஒருவர், துறவிகளிடம் ஏன் மக்கள் போய்க் குவிகிறார்கள்? அப்படி இவர்களிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினார். ஒரு ஜென் துறவியிடம் அதுபற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென்று மடத்தை நோக்கி புறப்பட்டார். 

  மடத்தை அடைந்ததும் துறவி அவரை அமர வைத்தார். ஒரு கோப்பையை எடுத்து தேநீர் (டீ) ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிவிட்டது, ஆனாலும் நிறுத்தாமல் இன்னும் ஊற்றினார் ஜென் துறவி. கோப்பையிலிருந்து தேநீர் கீழே வழிந்தது.


"கோப்பை நிரம்பிவிட்டது" என்று கூறினார் பேராசிரியர்.


இனிமேல் இதில் ஊற்ற முடியாதா? வினவினார் ஜென் துறவி.


நிரம்பிய கோப்பையில் எப்படி ஊற்ற முடியும்? என்றார் பேராசிரியர்.


"அதுபோல்தான் நீங்களும். ஏற்கனவே உங்கள் மனதில் உங்கள் கருத்துக்களை முழுதும் நிரப்பிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். பிறகெப்படி நான் துறவறத்தைப்பற்றி விளக்க முடியும்? அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் பின்னர் சொல்கிறேன்" என்றார் துறவி.



  அதுபோலத்தான் இளமை முதலே குழந்தைகளின் மனதில் முழுமையாய் நம்மை/ நம் எண்ணங்களை திணித்து நிரப்பிவிடுகிறோம். பிறகெப்படி அதில் புதிதாய் எண்ணங்களும், செயல்களும் திறமைகளும் வளரும்?

  ஒரு செடி கருகிப்போக விஷம் மட்டும் காரணமல்ல; தினமும் அதனருகில் சென்று திட்டினால் போதும்! அது போலவே குழந்தைகளும் - ஆனால் இதைத்தான் நமது சந்ததிகளுக்குச் செய்துகொண்டிருக்கிறோம்! குழந்தை என்பது மனித இனம் தழைக்க நம் சந்ததியை இந்த உலகிற்கு விட்டுச்செல்லுதலே தவிர நம்மை விட்டுச்செல்வதல்ல. நீங்கள் வாழ்நாள் முழுதும் முயன்றாலும்கூட இன்னொரு உங்களை உருவாக்க முடியாது. 

  குழந்தைகளுக்கு எதை எப்படிப் படிக்க வேண்டும் என்று படிக்கச் சொல்லிக்கொடுங்கள், தேர்வு முக்கியம், மதிப்பெண்கள் முக்கியம் ஆனால் அதைவிட குழந்தைகள் முக்கியம்!

ஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் மாணவர்கள்தான் உள்ளே நுழையவேண்டும்! 

டிஸ்கி - பிடித்திருந்தால் பகிரவும்!


6 COMMENTS:

  1. சிறப்பான பதிவு... பாராட்டுக்கள்...

    நல்லதொரு உதாரணத்துடன் (ஜென் கதை) சொன்னது சிறப்பு... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  2. nalla padhivu
    surendran

    ReplyDelete
  3. மிக அருமையா சொல்லிருகீங்க..

    ReplyDelete
  4. ஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் மாணவர்கள்தான் உள்ளே நுழையவேண்டும்!

    நல்லதொரு பதிவு நிலவன்பன் !

    ReplyDelete
  5. குழந்தை என்பது மனித இனம் தழைக்க நம் சந்ததியை இந்த உலகிற்கு விட்டுச்செல்லுதலே தவிர நம்மை விட்டுச்செல்வதல்ல.


    arumai
    thodarattum intha payanam :)

    ReplyDelete