எப்பத்தான் முடியும் இந்த இலங்கை நாடகம்?

  2009 மட்டுமல்ல 2013லும் நாடகம் போடவேண்டுமென்றால் அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்சினையை எடுத்துக்கொள்கிறார்கள். 


  கொழும்புவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதி நவீன அலுவலகம் கட்ட இலங்கை அரசுடன் ஒப்பந்தம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக இலங்கை வீரர் ஒருவர் செயல்படுவார்.

  அதாவது பேரன் ராஜபக்சே அரசுடன் வர்த்தகம் புரிவார், தாத்தா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நம் நாட்டு அரசுடன் நாடகம் போடுவார்.


எழும் மாணவர் சக்தி - மனதைத் திற!

  மாணவர்கள் என்றால் நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்வார்கள், பஸ்டே என்ற பெயரில் கலவரம் நடக்கும், பக்கத்துக் கல்லூரியில்போய் கலவரம் செய்வார்கள், எதிர்காலத்தை பற்றிய எந்த தெளிவும் இருக்காது என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

  இந்தித் தடுப்புப் போராட்டம் வெற்றிபெற ஒரே காரணம் மாணவர்கள் மட்டும்தான் என்பதை யாருமே மறுக்க இயலாது. ஆனால் இலங்கை இறுதிப்போரின்போது தொடங்கிய மாணவர் போராட்டம் அப்போதைய அரசால் தடுக்கப்பட்டுவிட்டது. சகோதர்கள் கொத்துக்கொத்தாய்ச் சாகும்போது தாய்த் தமிழ்நாடு வேடிக்கை பார்த்தது என்ற குற்ற உணர்ச்சி பல நாட்களாய் இருந்தது. தமிழ் இளைய சமுதாயம் வெறும் கேளிக்கைகளில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் பல நாட்களாகவே இருந்தது.

  ஆனால் இப்போது மாணவர்கள் தொடர்ச்சியாய் இலங்கைப் பிரச்னைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கட்சி, இனம், மதம், சாதி சார்பின்றி அனைத்துக் கல்லூரி மாணவர்களும் "மாணவர் சக்தி" என்ற ஒரே ஆயுதத்துடன் போராடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ரத்தம் தமிழரின் ரத்தம் என ஒவ்வொரு மாணவரும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  தலைவனில்லை, கட்சியில்லை ஆனால் லட்சியம் மட்டும் கொண்டு தவறென்றால் ஒன்றாய்க்கூடி அதை எதிர்க்கும் மாணவர்கள் நம் சமுதாயத்தில் இருப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் பெருமை.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சிலம்பரசன்.

தொடங்கிய போராட்டம்:

  சென்னை லயோலா கல்லூரில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை, தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாளான 11/03/13 அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர். பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுதும் பற்றிக்கொண்டது.


  இன்று போராட்டம் நடத்தாத மாவட்டங்களே இல்லை என்னும் அளவுக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஏன் பண்டிச்சேரியிலும்கூட மாணவர் போராட்டத்தால் அதிர்ந்துவருகிறது.