இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?
ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது.
ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)
திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்:
முந்திய காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள். இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது.
ஜப்பானிய-தமிழ் மொழியைப்பற்றி ஆராய்ந்த ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் ஓசை களஞ்சியத்திலிருந்து அவர் வரலாறு (18.01.2009)
தமிழ் - ஜப்பானிய மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ:
டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் ஜப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அகராதியின் படிகள் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.
"ஜப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.
ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.
1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.