Blogger Widgets

இறுதிப்போரும் கருணாநிதியும்!

  ஈழப் போரை இலங்கையும், இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார். 

  எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது. 

  மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார். திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன என நாம் கதறியபோதெல்லாம், அவர் சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள் என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார். அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.


அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.


  திருச்சி  தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், படுகொலைகளுக்கு எதிரான ஊர்வலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். ஊர்வலத்தின் இறுதியில், இன துரோகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை நானும் சில இளைஞர்களும் சாலையில் வைத்துக் கொளுத்தினோம். அப்போது, காவல்துறை மீதிருந்த அச்சத்தினால் சலனப்பட்ட தம்பி ஒருவர் தவறுதலாக, என் கால்களில் பெட்ரோலை ஊற்றிவிட்டார். பதாகையில் எரிந்த தீ என் கால்களில் எரிந்தது. இடது கால் கடுமையாக தீயில் வெந்த நிலையில் அங்கேயிருந்த கடையில் படுத்திருந்தேன். 


  தஞ்சையிலிருந்து வந்த அதிரடிப் படையினர், சாலையில் நின்ற பொதுமக்களை எல்லாம் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினர். தீ வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ எனக் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். எங்கள் இடத்திற்கு மிக அருகில் அவர்கள் வரும்போது, நானும் க.மாதவன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சில நண்பர்களும் அவ்விடத்தின் பின்னே இருந்த கழிவுநீர்க் குட்டையில் ஒளிந்துகொண்டோம்.

  அதன் பின்னர், எங்களால் வீடு திரும்பவே இயலவில்லை. எல்லா வீடுகளிலும் சோதனைகள், கைதுகள். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இயலாமல், வெந்து தசை கிழிந்த காலுடன் இரவெல்லாம் அலைந்து திரிய வேண்டி இருந்தது. 
  என் மனைவி அப்போது கருவுற்றிருந்தார். என் வீட்டில் தங்கினால், என்னால் அவரது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் தொல்லை வரும் என்பதால், வேறொரு கிராமத்தில் தலைமறைவாகத் தங்கிக் கொண்டிருந்தேன். செங்கிப்பட்டியைச் சேர்ந்த திரு.குழ.பால்ராசு, அவர் மகன் திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி ஆகியோரைத் தேடி ஏறத்தாழ இருபது கிராமங்களில் காவல்துறை சுற்றித் திரிந்தது. நள்ளிரவு வேளைகளில்ஆண்கள் இல்லா வீட்டின் கதவைத் தட்டி, பெண்களிடம் சோதனை என்ற பேரில் முறையற்று நடந்து கொள்வது காவல்துறையின் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டது.
  திரு.குழ.பால்ராசு, அப்பகுதியின் த.தே.பொ.க தலைவர். அவர் காடுகளுக்குள் பதுங்கி இருந்தார். திரு.ஸ்டாலின், 18 வயது இளைஞர் அவர், காடு காடாகத் திரிந்து, உணவின்றி வாடிக் கொண்டிருந்தார்.

  இவ்விருவரும் கிடைக்கவில்லை என்பதால், திரு.பால்ராசுவின் இளையமகன் அப்புவைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். அப்பு அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்! உன் அப்பாவும் அண்ணனும் சரண்டர் ஆனாத்தான் உன்னை விடுவோம் என்று அவனிடம் மிரட்டல் விடுத்தது காவல்துறை.

  ஏறத்தாழ ஒருவார காலம். செங்கிப்பட்டி சுற்று கிராமங்களில், மக்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை, உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. எந்நேரமும் காவல்துறை மற்றும் ஆள் காட்டிகளின் கண்காணிப்பிலேயே உழன்றனர் மக்கள். நான் வெகுதொலைவில் ஒரு கிராமத்தில், தங்கிவிட்டேன். ஏறத்தாழ 60விழுக்காடு தீக்காயம். முறையான மருத்துவம் பார்க்க இயலாததாலும், ஒளிந்துகொள்வதற்காக கழிவு நீர்க் குட்டையில் பதுங்கியதாலும் காலிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது. 

  ஊடகங்களில் இந்த நெருக்கடி நிலையைப் பதிவு செய்தால், ஓரளவு தளர்வாக இருக்கும் என்றெண்ணி, எனது ஊடக நண்பர்களுக்குப் பேசிக் கொண்டே இருப்பேன். எல்லோரும் பதற்றமடைந்தார்கள், வருந்தினார்கள். ஆனால், எவராலும் இச்சம்பவங்கள் குறித்த ஒரு துண்டுச் செய்தியைக் கூட கொண்டுவர முடியவில்லை. 

  அப்படி ஒரு நெருக்கடியை திரு.கருணாநிதி அரசு ஊடகங்கள் மீது தொடுத்திருந்தது நண்பர்களே!
வழக்கில் தொடர்புடைய போராட்டக்காரர்களைச் சரிவரக் கைது செய்யவில்லை என்பதற்காக, ஒரு காவல்துறை ஆய்வாளர் மீது துறைவாரி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அதாவது, அவரது இவ்வளவு கெடுபிடிகளும் போதாது, மேலும் ஒடுக்குமுறையை ஏவ வேண்டும் என்று பொருள்!

  அதன் பின்னரும், அவர்கள் முகாமையாகத் தேடிய எவரையும் அவர்களால் கைது செய்யவே இயலவில்லை. இறுதியாகப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது காவல்துறை. திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி, திரு.மாதவன் உள்ளிட்ட சிலர் ஒப்படைக்கப்பட்டனர். தேடுதல் வேட்டையைக் காவல்துறை நிறுத்திக் கொண்டது.

  நான், தஞ்சைக்குத் திரும்பினேன். சீழ் பிடிக்கும் நிலையில் இருந்த கால், மெல்ல மெல்ல குணமானது. ஏறத்தாழ இரு மாதங்களுக்குப் பின், மீண்டும் நடக்கத் துவங்கினேன். அதன் பின்னர், காங்கிரஸ்  தி.மு.கவிற்கு எதிரான ஆவணப்படம் ஒன்றை இயக்கினேன். இளந்தமிழர் இயக்கம் சார்பில் அப்படத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல முற்பட்டபோது, மீண்டும் தேடுதல் வேட்டை, சோதனை, கெடுபிடிகள். 

  என் வீட்டில் ஏறத்தாழ 40 காவல்துறையினர் சோதனை செய்தனர். தெரு முழுக்க காவல்துறைப் படை நின்றது. இவ்வாறு அவர்கள் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே. இந்தச் சோதனை நடந்தபோது, நான் வேறொரு இடத்தில் ஏறத்தாழ 5000 குறுவட்டுகளுடன் இருந்தேன். என்னுடன், மு.நியாஸ் அகமது இருந்தார். 

  சோதனையிட்ட காவலர்கள் என் அம்மாவிடம் விசாரணை செய்தனர். வீடு முழுதும் சல்லடைபோட்டு விட்டு, எதுவும் கிடைக்காமல் திரும்பினர். அன்று இரவே, நாங்கள் மீண்டும் ஓடத் துவங்கினோம். இம்முறை நண்பர்கள் க.அருணபாரதியும், வெ.இளங்கோவனும் இணைந்து கொண்டனர். 



  அந்த நேரத்தில், சென்னை ரிச்சி தெருவில் கூட ஒரே நேரத்தில் 10 குறுவட்டுகள் வாங்க முடியாது. எங்கள் தேவையோ ஏறத்தாழ 50,000 குறுவட்டுகள். வெளியே சொல்லவே இயலாத உத்திகளை எல்லாம் கையாண்டு, பக்கத்து மாநிலத்துக்குச் சென்று, குறுவட்டுகள் வாங்கி, ஊர் ஊராக அலைந்து தங்கி, அந்த ஆவணப்படத்தை ஆயிரக் கணக்கில் படிகள் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினோம்.

  ஈரோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நான் தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன். விடுதி வரவேற்பறையில் காவல்துறையினர் விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர். ஸ்லீவ்லெஸ் பனியன், பெர்முடா கால்சட்டையோடு தப்ப வேண்டியிருந்தது. அருணபாரதியோ, அறையின் உள்ளே இருக்கிறார். அவரது மடிக் கணினியில், போர்க் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் இருந்தன. அலைபேசியில் அவருக்குத் தகவல் கூறி, சில நொடிகளில் தப்பினோம்.

  இப்படியாக நாங்கள் ஓடிக் கொண்டே இருந்தோம். நாங்கள் மட்டுமல்ல, எம் போன்ற ஆயிரக் கணக்கானோர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தோம். இவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அப்போது ஊடகங்களில் திரு.கருணாநிதி நடத்திய ஒருவேளை உண்ணாவிரதம், அவரது முதுகு சிகிச்சை, அவரது போர் நிறுத்தக் கடிதங்கள், போர் நிறுத்தப்பட்டது என்ற வெற்றிச் செய்தி, மழைவிட்டும் தூவானம் விடாததுபோல இன்றைக்கு சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற உவமை நயமிக்க அறிவிப்பு போன்ற செய்திகள் மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தன.

  நானும் அருணபாரதியும், வெ.இளங்கோவனும், நியாஸ் அகமதுவும் இன்னும் சில தோழர்களும் சில சாட்சிகள் மட்டுமே. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் வெகு சாதாரணமானவை என்னுமளவுக்கு, நாட்டில் ஒடுக்குமுறை நிலவியது. எண்ணற்றோர் பிழைப்பிழந்து, குடும்பம் இழந்து, நிம்மதி தொலைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். 19 பேர் தீக்குளித்தே இறந்தார்கள் எனும்போது, அப்போதைய மனநிலையை உணர முடிகிறதல்லவா! 


  எத்தனை வழக்குகள், எத்தனைக் கைதுகள், எவ்வளவு அடி,உதைகள்! கணக்கிலடங்காதவை அவையெல்லாம் நண்பர்களே. இந்தச் சூழல்களில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அவர்களில், நண்பர்கள் பா.ஏகலைவன், வெற்றிவேல் சந்திரசேகர், இளையராஜா, எனது உதவியாளர் ரஞ்சித், ஓசூர் வினோத் மற்றும் விமல் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அந்த நேரத்தில், பேருந்தை மறித்தவர்கள் கூட, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

  சிங்களப்படைக்கு ஆயுதம் ஏற்றிய ராணுவ வண்டிகள் சேலம் வழியாக கோவை வருகின்றன என்று குறுஞ்செய்தி அனுப்பியது மாபெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டது நண்பர்களே! அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நாங்கள் கோவைச் சிறையில் சந்தித்தோம்.

  ஈழப் போர்க் காட்சிகள் அடங்கிய ஆவணப்படக் குறுவட்டுகள் வைத்திருந்தால் கைது, அப்படங்களைக் கேபிளில் ஒளிபரப்பினால் கைது, ராஜபக்சே கொடும்பாவி கொளுத்தினால் கைது, தங்கபாலு கொடும்பாவி கொளுத்தினால் கைது, ஊர்வலம் போனால் கைது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது, தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே கைது, ஈழப் போர் குறித்த துண்டறிக்கைகளை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர்களுக்கு மிரட்டல், ஃபிளக்ஸ் பதாகைகள் அச்சிடுவோருக்குக் காவல்துறையின் எச்சரிக்கைகள், கண்காணிப்புகள் இன்னும் என்னென்னவோ நடந்தன!

ஆகவேதான்,
 சொல்கிறேன், போர் தமிழகத்திலும் நடந்தது!




  திரு.கருணாநிதியின் இந்த அணுகுமுறைகளைப் பற்றிய நூல் ஒன்றை வெற்றிவேல் சந்திரசேகர் எழுதியுள்ளார். மிகச் சிறந்த ஆவணம் அது. ஈழப் படுகொலையில் கருணாநிதி என்பது அந்த நூல். ஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:

'பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே

தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்

உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்

பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்

  இவை எல்லாவற்றையும், திரு.கருணாநிதி கடைப் பிடித்தார்; தேர்தலில் வெற்றியும் பெற்றார். இப்பொழுதும் இதே உத்திகளுடன்தான் அவரது தமிழீழ அரசியல் நடக்கிறது. இவ்வாறெல்லாம் அவரை விமர்சிப்பதால், நான் வேறு ஏதேனும் கட்சியின் அரசியலை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். இதுவரை, என் விரல்களில் கறை படிந்ததே இல்லை; இனியும் படியப்போவதில்லை. வரலாற்றில் அக்கறை கொண்டவன் என்பதால், இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஆவணமாக வேண்டும் என்ற கடமைக்காக இதை எழுதுகிறேன். இது எனது சாட்சியம். அவ்வளவே!

  எங்களது இந்த அனுபவங்களிலிருந்து எதையேனும் உணர்ந்துகொண்டு, ஈழ விடுதலைக்கு உங்களால் பங்களிக்க முடியும் என்றால், மனநிறைவடைவோம்.

ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு! - எனது சாட்சியம், ம.செந்தமிழன்.
Via - @Settaikaaran 


0 COMMENTS:

Post a Comment