Blogger Widgets

இலங்கையில் படம்காட்ட மாட்டாங்களாம்!

    சமீபத்தில் இயக்குனர் சசிக்குமார் ஒரு பேட்டியில் - தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். இதற்கு சில தயாரிப்பாளர்களும், இந்து மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது.


    தீபாவளிக்கு வெளியான 7ஆம் அறிவு படத்தில் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத்தான் இயக்குனர் சசிகுமார் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

வசனம் : 
“வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ, ஒரு நாட்டின்மீது ஒன்பது நாடுகள் சேர்ந்து போர் செஞ்சா அது வீரமல்ல; துரோகம்” – இந்த வசனம் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

    ஏன் இந்த வசனத்தில் துரோக நாடுகளின் பெயர் போட்டு இந்தியா என்று சொல்லியிருந்தால் இந்தியாவில் தணிக்கை செய்யாமல் இருந்திருப்பார்களா என்ன?? (ஏன் அதை முருகதாஸ் செய்யவில்லை??)

    ஒரு அரசாங்கம் குறித்து யார் என்ன (தவறாக) சொன்னாலும் அது உண்மையாகவே இருந்தாலும் அதைத் தணிக்கை செய்வது இயல்பு.

இலங்கையில் இவர்கள் படம் காட்டாமல் விட்டுவிட்டால் என்ன நடக்கும்??

  • இலங்கை அரசாங்கத்தின் கஜானா ஒன்றும் காலியாகிவிடப் போவதில்லை. அரசாங்கம் இவர்கள் காலில் விழுந்தும் கதறப்போவதில்லை.
  • ஆனால் தமிழ் உறவுகள் தமிழ்ப்படங்களைக் காண முடியாத நிலை ஏற்படும். . வானொலியிலும் புதிய பாடல்கள் ஒளிபரப்பாகாது. திரையரங்குகளில் வெறும் சிங்களத் திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும். வேறு வழியில்லாமல் சிங்கள படத்தை மட்டுமே காணுகிற நிலை ஏற்படும்.
  • அரசும் இதைத்தான் விரும்புகிறது. இப்படி ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுடன் உள்ள தொடர்பு முறிந்துவிட்டால் தனிச்சிங்களமாக இலங்கை விளங்கும்.
  • திரைப்படங்கள் மூலமாகவாவது நம்முடன் இணைந்திருந்த நெஞ்சங்களுக்கு அதுவும் கிடைக்காமல் போகும்.

    வலியில் உள்ள ஈழத்தமிழ் நெஞ்சங்களுக்குத் தேவை நமது அன்பும் அரவணைப்பும் உதவியும்தானே தவிர முன்கோபங்களும், உணர்ச்சிகளைக் காட்டுவதும், கர்ஜிப்பதும் அல்ல.

    வெறும் உணர்ச்சிகளால் நாம் அடைந்த தோல்விகள் போதும். இனியாவது கற்பனை உலகில் வாழாமல் நடைமுறையை யோசித்து, இன்னும் இலங்கையின் சிறைகளில் வாடும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை விடுவிக்க ஆவன செய்வோம்! போரினால் குடும்பத்தையும், வாழ்க்கையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்த நம் சொந்தங்களுக்கு நம்மால் முடிந்த உதவிளைச் செய்வோம்! அதை முன்னெடுத்துச் செல்ல தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு கோரிக்கை வைப்போம்!




“போராளி” படத்தின் வெளியீட்டு உரிமையை இலங்கைக்குக் கொடுக்கப்போவதில்லை என்ற சசிக்குமாரின் முடிவை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு நிலாப்பெண் பரிந்துரைக்கிறாள்.


0 COMMENTS:

Post a Comment