Blogger Widgets

தமிழ்ச் செம்மொழி மாநாடு – சில உண்மைகள்

      திருப்பூரில் தங்கியிருந்த சமயம் அலுவலக நண்பி ஒருவர் டெல்லியிலிருந்து வந்திருந்தார். அவர் சுத்த ஹிந்தியர், தமிழ் தெரியாது. பணிகள் முடிந்து அவரை வழியனுப்ப கோவை ஏர்போர்ட்டுக்குச் செல்லும்போது வழி எங்கிலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான போஸ்டர்கள் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் அவர் கேட்டார், “என்ன இது? ஏதேனும் கோவில் திருவிழாவா?”

“இல்லை, தமிழ் மொழிக்கான ஒரு மாநாடு” என்றேன்

“இதனால் என்ன பயன்?”

“தமிழ் மொழி வளர இலக்கியம், கணினியில் அதன் பயனை மேம்படுத்த உதவிடும். தமிழ் மன்னர்களின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்” என்றேன்.

அவர் சிரித்துவிட்டுச் சொன்னார், “தோராயமாக இதற்கு எவ்வளவு செலவாகும்??

“ஒரு 1500 கோடி செலவாகும்!”

“என்னது 1500 கோடியா??? இது மாநாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட எல்லோருடைய சொந்த பணம்தானே???”

“இல்லையில்லை, இது தமிழ்நாடு அரசினுடைய பணம்”


“அரசின் பணமா??? அதை இப்படியா கொட்டுவது???? இதற்கு பதில் படிக்க இயலாத பல ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி தரலாமே!! அப்படித் தந்தால் அவர்கள் சொல்வார்களே தமிழின் பெருமையை?? அல்லது வேறு ஏதாவது நல்ல காரியங்களுக்காவது பயன்படுத்தலாமே? சரி, இதில் எதிர்க்கட்சித் தலைவரும்(ஜெயலலிதாவின் பெயரை சொல்லி) கலந்து கொள்கிறார்தானே??” என்றார்.

“இல்லை அவர் எப்படி கலந்து கொள்வார்?”

“ஏன் அவர் தமிழர் இல்லையா??”

“அவரும் தமிழர்தான், ஆனால் இது ஆளும்கட்சி (அப்பொழுது கலைஞர் ஆட்சி) ஏற்பாடு செய்துள்ள விழா, இதில் அவர் எப்படி கலந்து கொள்வார்?”

“பிறகெப்படி இது உலகத் தமிழர் அனைவருக்குமான செம்மொழி மாநாடாகும்??” என மடக்கினார்.

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. இதற்குள் ஏர்போர்ட்டின் அருகில் வந்துவிட தண்ணீர் வேண்டுமெனக் கேட்டார். அருகிலிருந்த ஒரு கடையில் நுழைந்ததும், “அண்ணா என்ன வேணும் உங்களுக்கு??” என்றான் அந்த கடைச்சிறுவன் – ஒரு பதினாலு வயதிருக்கும்.

ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிவிட்டு, அவசரத்தில் மீதியை மறந்துவிட்டேன். கடையின் கதவை நோக்கி நகந்த சமயம் அந்தச் சிறுவன் சொன்னான், “அண்ணா மீதியை வாங்கிட்டுப் போங்க!” சிரித்துக்கொண்டே மீதியை வாங்கிக்கொண்டேன்.

பயணம் தொடர்ந்தது. 

“நீங்கள் என்ன தொலைக்காட்சி பார்ப்பீர்கள்?? என்றார்(ள்).

“சன் டிவி, கலைஞர், ஜெய டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஜெயா மியூசிக்” என்றேன்.

“இவை அனைத்துமே அரசியல் கட்சிகளுடைய சானல்கள். இவை தவிர வேறு டிவிக்களே இல்லையா?”

“இருக்கிறது, ஆனால் அவைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, அதனால் பார்ப்பதும் இல்லை!”
‘அப்படியானால் அவர்கள் என்ன சொன்னாலும் நிஜம். இவர்கள் காட்டுவதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. உலகில் மற்ற எதையும் தெரிந்து கொள்ள முடியாது. சுருங்கச் சொன்னால் கிணற்றுத் தவளைகள்?? நிஜம்தானே??” என்றார்.

இதற்கும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்குள் ஏர்போர்ட் வந்துவிட்டதால் அவர் நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டார். வரும் வழியில் எனக்கு ஒரு யோசனை! அப்படி என்னதான் இந்தச் செம்மொழி மாநாட்டில் உள்ளது எனப் பார்ப்போமே/! என்ற முடிவுடன் மாநாட்டுக்குச் சென்றேன். லட்சக்கணக்கில் அவ்வளவு கூட்டம். யாரோ மைக்கில் முதல்வரைத் துதி பாடிக்கொண்டிருந்தார். அதனால் அந்த பக்கமே போகவில்லை. கணினியில் தமிழ்ப் பற்றிய ஆய்வரங்கைப் பார்த்துவிட்டு எதிர்ப்புறம் நிறுத்தப்பட்டிருந்த மன்னர்களின் அலங்கார ஊர்திகளைப் பார்க்கச் சென்றேன். முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் சிலையைப் பார்த்ததும் ஏனோ அந்தப் பதினாலு வயதுக் கடைச் சிறுவன் நினைவுக்கு வந்துவிட்டான். திரும்பிவிட்டேன்.



இதுவரைக்கும் அந்தத் தோழி கேட்ட இரு கேள்விகளுக்கும் விடை கிடைக்கவில்லை. அதேபோல் இந்த மாநாட்டால் தமிழ் எவ்வளவு வளர்ந்துள்ளது என்றும் தெரியவில்லை.


0 COMMENTS:

Post a Comment