Blogger Widgets

இலங்கையில் விண்ணைத்தொடும் விலைவேசி!

   இதை வாசி என்று எழுதினால் வெறுமனே வாசித்துவிட்டுப் போய்விடுவீர்கள் என்றுதான், விலைவேசி என்றால் இரண்டு, மூன்று முறை மேலும், கீழும் படிப்பீர்கள் என்று தெரியும்!

   கண்டி பேருந்து நிலையத்திலிருந்து பின்னிவெல யானைகள் காப்பகம் செல்லும்போது (கொழும்பு பேருந்து), இந்த பின்னிவெல என்ற பெயரை சிங்களத்தில் உச்சரித்தால் மட்டும்தான் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புரியும் (தமிழர் தவிர). இந்த பெயரை கண்டுபிடிக்க எனக்கு அரை மணி நேரமானது.


   இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் இலங்கையில் 95 சதவிகிதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள் ஏதாவது சொன்னாலும் புரியாது. ஊர் பெயரைக்கூட சிங்கள உச்சரிப்பில் சொன்னால்தான் புரியும். உங்களது இடம் வந்தால் கண்டக்டர்ரே வந்து உங்களை இறக்கி விட்டுவிடுவார். உங்கள் மேலுள்ள பாசத்தினால் அல்ல, இன்னும் இருந்தால் ஆங்கிலத்தில் பேசி கொலை செய்வான் என்றுதான். சரி கதைக்கு வருவம்!

   பேருந்து கிளம்பி வெளியேவரும் சமயம் ஒரு பெண் ஏறினார், என் அருகே வந்து அமர்ந்தார். (பொண்ணுனாதான் நீ ஈஈனு பல்ல காட்டிருப்பியே!). வேறு எங்கும் இருக்கை காலி இல்லை. ஏதோ என்னிடம் அராபிக்கில் கேட்டார், பின்புதான் அது சிங்களமென்று தெரியும்.

“ஐ டோன்ட் நோ சிங்களா!” என்றேன்.


“இந்த பஸ் கொழும்புதானே போகிறது?” என்றார். எப்புடிதேன் கண்டுபிடிக்கிராங்கனே தெரிய மாட்டேங்குது, நாம் தமிழர் என்று! டேய் கேமரா எதாச்சும் வச்சு பார்க்குறீங்களா? ஸ்ஸ்ஸ்ஸ்!

   (இன்னொரு முக்கியாமான விஷயம் தமிழன் எங்கு போனாலும் மத்த மொழிகளை கற்றுக்கொள்ள மாட்டான் அல்லது கற்றுக்கொள்ள விரும்பமாட்டான்! இந்தியா, துபாய், அரபிய நாடுகளில் இந்தி பேசாத ஒரு இந்தியன் என்றால் அது தமிழன்தான் (நானுந்தேன்). இலங்கையில் சிங்களம் பேசவில்லை என்றால் அது தமிழன். மலேசியா, சிங்கப்பூரில் மலாய் பேசவில்லை என்றால் அது தமிழன். த்தமிழேண்டா!)


“ஆம், கொழும்புதான்” என்றேன்.


“சரி எந்த பஸ்னு பார்க்காமலே ஏறிவிட்டீர்களே, வேற பஸ்சா இருந்திருந்தா?”


"பிறகென்ன ஏறும்போது பின் பக்கம் பார்த்தனான், கொழும்பு எண்டு போட்டிருந்தது, ஒருவேளை முன்பக்கம் வேறு போட்டிருந்தால் என்ன செய்வதெண்டுதான் கேட்டன்! வேறு இடம் போகும் பஸ்சாக இருந்தால் இறங்கிவிட வேண்டியதுதான்


“இல்லை, அவர்கள் பிடித்து தள்ளிவிடுவார்கள்” என்றேன்.


"முன்பக்கம் ஜிலேபியை பிச்சு போட்டிருக்கிராங்களே, அது புரியுமா?" என்றேன். (சிங்களம்)


“புரியும்”


“பஸ்ல போட்டிருக்கிற இந்த பாட்டை மாற்றவே மாட்டாங்களா?? காது கிழியுது, எல்லாமே ஒரே ஆர்கெஸ்ட்ரா பாட்டு மாதிரியே இருக்கிறது.”

பதிலேதுமில்லை. சிறிது நேரம் அமைதியாகவே போனது.


“நீங்கள் எந்த ஊர்?”


“கோயமுத்தூர்”


“இந்தியாவோ?” அவர் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. சகஜமாக பேச ஆரம்பித்தார். 


“இங்கே எப்படி?”


“துபாய் போகிறேன், மூன்று நாள் கண்டிக்கு கொடுத்துவிட்டேன்”


“இதுதான் இலங்கைக்கு பஸ்ட் ட்ரிப்போ?


“இல்லை, இதுதான் இலங்கைக்கு லாஸ்ட் ட்ரிப்”


“ஏன் அப்படி சொல்லுரீங்கோ?”


“இங்கே விற்கும் விலையில் பொருள் வாங்க வேண்டுமென்றால் நான் துபாயைதான் தூக்கிக் கொண்டு வரணும்!”


"ஓம் விலை கொஞ்சம் அதிகம்தான்!”


“கொஞ்சமில்லை, ஒரு சிகரெட்டின் விலை 22 ருபாய்.”


“இது ரொம்ப முக்கியம்”


“இதுமட்டுமில்லை, ஒரு டீ Rs.30, மசால் தோசை Rs.180, பெப்சி 500ml Rs.100, பீர் Rs.250 இப்படி எல்லா பொருட்களின் விளையும் இப்படித்தான்”


“இந்தியாவில் இதெல்லாம் குறைவோ?”


“இந்தியாவில் ஒரு சிகரட் Rs.6, டீ Rs.7, மசால் தோசை Rs. 45-60 அதுவும் மிக தரமான உணவகங்களில்”


“அப்படியோ?”


“ம்ம்!, நீங்கள் எந்த ஊர்?”


“நான் கல்லூரியில் ப்ரொபசரா இருக்கிறேன். பிறப்பு மட்டகளப்பு, இப்போ வசிப்பது கொழும்புவில், கண்டிக்கு வாரத்தின் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு அன்று பாடம் சொல்லித்தர வருவன்! நாளை பொங்கல் விடுமுறை அதனால் திரும்ப கொழும்புவுக்குப் போகிறேன், ஒரு நாள் பாடமெடுக்க காலை நான்கு மணிநேரம், இரவு மூன்றுமணி நேரம் பயணம்!”


“என்ன பாடம்?”


“தமிழ்”


“தமிழ் கல்லூரி எல்லாம் இருக்கிறதா?” (நம்ம ஊர்ல எவன் தமிழ்ல படிக்கிறான்?)


“ஓம்! இந்த பஸ் கொழும்பு போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்றார்.


"தெரியாது."


"நீங்கள் எங்கே இறங்குவீர்கள்" என்றார்.


"தெரியாது" (தெரிஞ்சா நான் ஏன் கண்டக்டரைவே பார்த்துக்கொண்டிருக்க போகிறேன்!)


"தெரியாமல் எப்படி இறங்குவீர்கள்"


"அதோ நிற்கிறாரே கண்டக்டர், இடம் வந்தவுடன் என்னை இறக்கிவிட்டுவிட்டு சாரி தள்ளிவிட்டுவிட்டுதான் போவார்! அவ்விளவு வெறி என்மேல! ஆங்கிலத்தில் பேசிய குற்றத்திற்காக!"


“சரி, கொழும்பில் சேலையின் விலை எவ்வளவு?” எனக் கேட்டேன்.


“சாதாரண சேலை 1000 ரூபாவிலிருந்து தொடங்கும். ஆனால் ஜாக்கெட் தைப்பதற்கான தையல் கூலி 750 ரூபாய்.” என்றார்.


“என்னாது எழுநூற்றி ஐம்பதா?” எனக்கு மயக்கம் வந்துவிட்டது. (ஆஹா! இப்பதானே தெரியுது ஏன் இலங்கையர்கள் சேலை உடுத்துவதில்லை என்று.).


அதற்குள் கண்டக்டர் இறங்குமிடம் வந்துவிட்டதாக கூறினான். இறங்கிவிட்டேன்!


(Note: Conversion Rate 1 INR = 2.1 Srilankan Rupee)


0 COMMENTS:

Post a Comment